செவ்வாய், 1 அக்டோபர், 2013

காகித எழுதி.


தேர்ந்த கவி ஒருவனின் 
கைகளில் சிக்கிக்கொண்ட
காகித எழுதி
கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது
காகிதத்தின் வெற்றிடங்களை
கனமான பொருளோடு...

சிறந்த சிந்தனாச் சிப்பியின்
கைகளில் சிக்கிய
சிறிய தூரிகை 
கிறுக்கிய
அகண்ட நெடிய 
ஓவியத்தைப்போல் 
நிறைத்து வழிந்தன
கவிதைகள்
வெற்றிடத்தில் இருந்து
வெற்றிடத்தைப் பற்றியதாக...

சூனியத்தில் இருந்து
வெறுமையில் இருந்து
பிறந்துகொண்டிருந்தது
பெருமைகளின் சிந்தனை

பிரசவிக்கும் தாயின்
முக்கலும் முனகலும் இல்லாமலே
பிரசவித்துக்கொண்டிருந்தது
காகித எழுதி
கவிதையை

நியாங்களில் இருந்து
நிஜங்களில் இருந்து 
வெறுமையை
நிரம்பிக்கொண்டு
பிறந்துகொண்டிருந்தது
அந்தக் கவிதை

தேன் நிறைந்த பூவின்
வாசமாக 
கிறங்க வைத்தன
வெற்றிடத்தைப் பற்றி
வெறும் காகிதத்தில் 
நிரம்பிக்கொண்டிருந்த 
வித்தக கவி

கவிதை 
சுவைக்க வந்தோர்
பூரணையில் மதுவருந்தி
களிக்கும் தேனிகளையொத்த
களிப்புடனே
பருகினர்
சுவைத்தனர் 


சுவைத்தவர் 
நிறைத்தனர்
தம் மன வெற்றிடத்தை;
வெறுமையே மிஞ்சியது
தேர்ந்த கவிக்கு

பிரசவ தாதியாய்
தன்னை மீண்டும் 
தயார் படுத்திக்கொண்டது
ஓர் காகிதம்
காகித எழுதியின்
புதிய பிரசவிப்புக்காய்

தேர்ந்த கவியின்
கைகளில் மீண்டும் சிக்கியது
காகித எழுதி...

வல்வையூரான்.