ஒரு சில தசாப்தங்களுக்கு
முதல் வரை
அகிம்சை என்றால்
காந்தி என்றனர்.
அதனையே உலகும்
காந்தியம் என்றது.
காந்தி நாடு என்று
பாரதத்தை கொண்டாடியது.
எது என்று
உலகுக்கு சொல்லி
பாரதத்தின் முகமூடி
கிழித்தான் பார்த்தீபன்
பாரதம் பார்த்திருக்க
பசியில் பிள்ளை நீர்த்து
பன்னிரண்டாம் நாள்
வீர சுவர்க்கம் சென்றான்
அகிம்சை தீயை
உலகில் ஏற்றிய
தீபச் சுடர் திலீபன்.
பௌத்தத்தை
அகிம்சை மதமென்றனர்
மதங்கொண்ட பௌத்தர்
மனட்சாட்சி இல்லாமல்
கொலைக்காட்சியை
உலகிற்கு காட்டினர்
முள்ளிவாய்க்களில்
அந்த ஆ.. கிம்சையாளருக்கு
அரவனைப்பு கொடுத்தது
கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா
தமிழன் என்ற உணர்வு
தலை தூக்கிய பொழுதெல்லாம்
தரங்கெட்ட தலைமைகள் - அதை
தகர்த்தெறிய தலைப்பட்டன.
மறத்தமிழர் எழுந்தனர்
மாணவராய்ப் பொங்கினர்
புறப்பட்டனர் புதுவழியில்
பட்டினி ஆயுதத்தை
பலமாய் பிடித்தனர்
முன்னவன் காட்டிய பாதையில்
முழுதாய் குதித்தனர்
மூண்டது தீ
முழு நாடும் பரவியது.
அடக்கத்தான் பார்த்தனர் சிலர் -அவர்களை
அடக்கி வைத்தனர் இவர்கள்
தம்மைத் தொடருங்கள்
என்றனர் சிலர்
வாருங்கள் எம் பின்னே
என்றனர் இவர்கள்
அரசியல் சாயத்தை
அள்ளி வந்தனர் சிலர்
அங்கேயே நில்லுங்கள்
என்றனர் இவர்கள்
இவர்கள் உங்கள் பிள்ளைகள்
இவர்களுக்கு புரிந்தது - ஏன்
உங்களுக்கு மட்டும் புரியவில்லை
இணைத்திடுங்கள் - உங்கள்
கைகளை இவர்களோடு
கொடுத்திடுங்கள் - உங்கள்
ஆதரவை இவர்களுக்கு
இணைப்பினால்
இனிதாய் ஒரு
நாடு பிறக்கும்.
வல்வையூரான்.
| Tweet | |||||











