வியாழன், 31 அக்டோபர், 2013

ஹைகூக்கள் 23.



பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள்
சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது
சர்வதேசம்



எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை
எட்டவில்லை
ஏங்கியது கன்னிக்காய் மனது.



கொடுத்துக்கொண்டிருக்கிறேன்
தீரவில்லை திகட்டவில்லை
முத்தங்கள். 



வைக்கோல் கன்று காட்டி ஏமாற்றிய பால்க்காரனுக்கு
நிஜக் குழந்தை காட்டப்பட்டது
சிக்னல் பிச்சைக்காரி.



பிடியின் வழி
வளைந்து வளர்கின்றன 
பானைகளும் குழந்தைகளும்.



பிடித்தபடி வளர்ந்தது பானை
வளரவில்லை 
அவர்தம் வாழ்க்கை.



கிளறுகின்றது கோழி
குப்பையோடு 
குடலையும் - பசி



மனிதாபிமானம் அற்றவர்களெனப்பட்டவர்களுக்கு(???!!!)
மனிதாபிமானம் உள்ளவர்களெனப்பட்டவர்கள்(???!!!)
வழங்குவது மரணம்!!!.



இடைவிடாத அடை மழை
சுகமாக தூங்குகிறது
என் அடுப்பில் பூனை.



கொட்டும் மழை
தூக்கம் தொலைத்த குழந்தை
ஏக்கம் தரும் கட்டில்...



வென்றவர்களென்றவர்கள்
வீழ்ந்தார்கள், வென்றார்கள் 
வீழ்ந்தவர்கள் - இலங்கை தேர்தல் முடிவு

வல்வையூரான்.

வியாழன், 17 அக்டோபர், 2013

புரியாத புரிதல்.


புரிதல்கள் இரண்டு
தமக்குள்
சந்தித்துக்கொண்டன

தமக்குள் புரிந்துணர்வில்லாமலே
பேசிக்கொள்ள ஆரம்பித்ததன
புரிதல்கள்;
புரிதல் பற்றியே

புரிதல்கள் பற்றிய
சர்ச்சை
புரிதல்கள் இல்லாததால்
புரிதல்களுக்குள்
முற்றிக்கொண்டிருந்தது

ஒரு புரிதல்
தன் பங்குக்கு
புரிதல் பற்றிய தன்
விளக்கத்தினை
பல்வேறுவகையில்
புரியவைக்க முயற்சித்தது
இன்னொரு புரிதலிடம்

கொஞ்சமும் புரிந்துகொள்ள
முடியாத இரண்டாம் புரிதல்
முதலாம் புரிதலின்
புரிதல் பற்றிய கொள்கைகளை
புரிதல் இல்லாமலே
விமர்சித்துக் கொண்டது.

இந்த முறை
புதிய கொள்கைகளோடு
இரண்டாம் புரிதல்
தன் பங்குக்கு ஆரம்பித்தது.

முதலாம் புரிதலின்
புரிதல் பற்றிய
கொள்கைகள்
எப்படி இரண்டாம் புரிதலுக்கு
புரியவில்லையோ
அப்படியே இப்போது
முதலாம் புரிதலுக்கும்
ஏதும் புரியவில்லை

புரியாத புரிதல்கள்;
புரிந்துகொள்ள முயற்சிக்காத புரிதல்கள்;
புரிதல் என்பதன் உண்மையைப்
புரியாத புரிதல்கள்;
தமக்குள்ள  மீண்டும்
சர்ச்சையை வலுப்படுத்திக்கொண்டன
புரிதல் பற்றியதாகவே
எங்கள் தமிழ் கூத்த(ட்ட)மைப்பைப் போலவே
புரியாத புரிதல்களுடன்.

வல்வையூரான்.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

காகித எழுதி.


தேர்ந்த கவி ஒருவனின் 
கைகளில் சிக்கிக்கொண்ட
காகித எழுதி
கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது
காகிதத்தின் வெற்றிடங்களை
கனமான பொருளோடு...

சிறந்த சிந்தனாச் சிப்பியின்
கைகளில் சிக்கிய
சிறிய தூரிகை 
கிறுக்கிய
அகண்ட நெடிய 
ஓவியத்தைப்போல் 
நிறைத்து வழிந்தன
கவிதைகள்
வெற்றிடத்தில் இருந்து
வெற்றிடத்தைப் பற்றியதாக...

சூனியத்தில் இருந்து
வெறுமையில் இருந்து
பிறந்துகொண்டிருந்தது
பெருமைகளின் சிந்தனை

பிரசவிக்கும் தாயின்
முக்கலும் முனகலும் இல்லாமலே
பிரசவித்துக்கொண்டிருந்தது
காகித எழுதி
கவிதையை

நியாங்களில் இருந்து
நிஜங்களில் இருந்து 
வெறுமையை
நிரம்பிக்கொண்டு
பிறந்துகொண்டிருந்தது
அந்தக் கவிதை

தேன் நிறைந்த பூவின்
வாசமாக 
கிறங்க வைத்தன
வெற்றிடத்தைப் பற்றி
வெறும் காகிதத்தில் 
நிரம்பிக்கொண்டிருந்த 
வித்தக கவி

கவிதை 
சுவைக்க வந்தோர்
பூரணையில் மதுவருந்தி
களிக்கும் தேனிகளையொத்த
களிப்புடனே
பருகினர்
சுவைத்தனர் 


சுவைத்தவர் 
நிறைத்தனர்
தம் மன வெற்றிடத்தை;
வெறுமையே மிஞ்சியது
தேர்ந்த கவிக்கு

பிரசவ தாதியாய்
தன்னை மீண்டும் 
தயார் படுத்திக்கொண்டது
ஓர் காகிதம்
காகித எழுதியின்
புதிய பிரசவிப்புக்காய்

தேர்ந்த கவியின்
கைகளில் மீண்டும் சிக்கியது
காகித எழுதி...

வல்வையூரான்.